குலாம் என்ற சொல் அடிமை வம்சத்தைக் குறிக்கும் சொல் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கு ஒரு காலத்தில் இந்த குலாம் வம்சத்தவர்கள் வசித்து வந்திருக்கலாம். இவர்களின் தலைவனாகவோ, மதக்குருவாகவோ ஏகோன்ஷா என்பவர் இருந்திருக்க வேண்டும்.
Wednesday 3 January 2024
குலாம் தக்கா பாறை ஓவியங்கள்
குலாம் என்ற சொல் அடிமை வம்சத்தைக் குறிக்கும் சொல் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கு ஒரு காலத்தில் இந்த குலாம் வம்சத்தவர்கள் வசித்து வந்திருக்கலாம். இவர்களின் தலைவனாகவோ, மதக்குருவாகவோ ஏகோன்ஷா என்பவர் இருந்திருக்க வேண்டும்.
அணைப்பட்டிப் பாறைஓவியங்கள்
மதுரைக்கு மேற்கே நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உசிலம்பட்டியிலிருந்து விக்கிரமங்கலம் செல்லும் வழியில் மகாலிங்கமலை என்றழைக்கப்படும் சித்தர்மலை அமைந்துள்ளது. இம்மலை அமைந்துள்ளப் பகுதியில் கல்யாணிப்பட்டி, அணைப்பட்டி எனும் ஊர்களுக்கிடையே அமைந்துள்ள குறுக்குக் கணவாய்ப் பகுதியில் அமைந்துள்ள புடவில் வெள்ளநிறப் பாறைஓவியங்கள் காணப்படுகின்றன. திரு கே.டி.காந்திராஜன் அவர்களிடமிருந்து இவ்வோவியங்களைப்பற்றி அறிந்துகொண்டோம். அணைப்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ் நம்மை இப்புடவிற்கு அழைத்துச் சென்றார். இயற்கையாகவே அமைந்த இக்குகையின் பாறைகளில் ஏராளமான வெள்ளைநிற ஓவியங்கள் காணப்படுகின்றன. மனித உருவங்கள், ஆடு,மாடு, குறியீடுகள் ஆகியவை கோட்டுருவங்களாக வரையப்பட்டுள்ளன. மனித உருவங்களில் ஆண், பெண் உருவங்களுக்கிடையே காட்டப்பட்டுள்ள வேறுபாடும், காளைமாட்டைக் குறிக்கப் போடப்பட்டுள்ள திமிலும் குறிப்பிடத்தக்கவை. ஆண்கள், பெண்கள் குழந்தைகளுடன் ஆடும் குழுநடனமும், கையில் ஆயுதத்தை ஏந்தியவாறு விலங்கு ஒன்றின் மீதமர்ந்துக்கொண்டு சண்டையிடும் மனிதன், காளைமாட்டின்மீது ஏறிக்கொண்டு பயணம் செய்யும் மனிதன் ஆகியவையும் சிறப்பாக வரையப்பட்டுள்ளன. குதிரையின் மீதர்ந்துக்கொண்டு விரைவாகப் பயணம் செய்யும் மனிதனை வரைந்து, குதிரை விரைவாக செல்வதைக் குறிக்க கால்களை வளைத்து வரைந்தமை அவ்வோவியனின் நுணுக்கத்தைத் தெரிந்துகொள்ள உதவுகிறது.
நெகனூர்ப்பட்டி பாறை ஓவியங்கள்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கருகிலுள்ள நெகனூர்ப்பட்டிக்கு அங்குள்ள பாறை ஓவியங்களைக் காணப் போயிருந்தோம். மாலையாகிவிட்டிருந்ததால் இருட்டுவதற்கு முன் பார்த்து விடவேண்டுமே என்ற பரபரப்பில் சென்று கொண்டிருந்தோம். அங்குள்ளவர்களுக்கு இவ்வோவியங்கள் உள்ள பாறையை 'அடுக்கண்கல்' 'அடுக்காங்கல்' என்றால் நன்றாகத் தெரிகிறது. நிறையபேர் வந்து பார்திருப்பார்கள் போலும். பெரிய பாறைகளை அழகாக அடுக்கிவைத்தாற்போல காட்சியளிக்கும் அடுக்கண்கல் இயற்கையின் விநோதங்களில் ஒன்று. இப்பாறையில் இயற்கையாக அமைந்த குகைத்தளத்தில் கற்படுக்கைகள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. அவற்றின் மேல் தங்களது பெயரைக் கிறுக்கி வைத்துள்ளனர் சில அறிவிலிகள்.
கற்படுக்கைகளுக்கு மேலே பாறையில் வெள்ளை நிற ஓவியங்கள் காலத்தைக்கடந்து கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன. நின்ற நிலையில் இரண்டு கைகளையும் மேலே தூக்கியவாறு உள்ள மனித உருவமும் காணப்படுகின்றன. சண்டையில் வெற்றிபெற்ற காட்சியை வெளிப்படுத்துவதாகத் தெரிகிறது. அருகில் கையில் எதையோ வைத்துக் கொண்டிருக்கும் மனித உருவமும், விலங்கு ஒன்றின் உருவமும் காணப்படுகின்றன.
பாறையின் முகப்பு பகுதியில் ஒரு கட்டத்தினுள் செதுக்கப்பட்டிருக்கும் பழந்தமிழ் எழுத்துகளுடன் கூடிய கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. இவற்றை விழுப்புரம் திரு வீரராகவன், திருமதி மங்கை வீரராகவன், முனைவர் இராசவேலு ஆகியோர் முதன்முதலில் பார்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர். 1995 ஆம் ஆண்டு ஆவணத்தில் கட்டுரையாக வந்த செய்தியிலிருந்து கல்வெட்டுச் செய்திகளை அறிந்து கொள்ளலாம்.
நெகனூர்ப்பட்டி தமிழ் - பிராமிக் கல்வெட்டு
நெகனூர்ப்பட்டியின் மேற்கே உள்ள ‘அடுக்கண்கல்’ என்ற குன்றின் கீழ்அடுக்கில் இயற்கையாக அமைந்துள்ள குகையில் கூரை விளிம்பில் இக்கல்வெட்டு உள்ளது.
காலம் : சுமார் பொ.ஆ 3 – 4 ஆம் நூற்றாண்டு.குகையில் படுக்கைகள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன. கூரையின் உட்புறத்தில் வெண்மை நிறத்தில் தீட்டப்பட்டுள்ள மனித ஓவியங்கள் அழிந்தநிலையில் உள்ளன. பிராமிக் கல்வெட்டு நான்கு வரிகளில் மிகவும் மெலிதாகக் கீறப்பட்டுள்ளது. கல்வெட்டினைச் சுற்றிச் சதுரவடிவில் கோடு போடப்பட்டுள்ளது.
பெரும்பொகை என்ற ஊரைச் சேர்ந்த செக்கந்தி என்பவரின் தாய் செக்கந்தண்ணி என்பவள் செய்வித்த பள்ளியை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. பெண்துறவிகள் கந்தி, கவுந்தி என்ற பெயர்கள் வைத்துக் கொள்வதை இலக்கியங்கள் சுட்டுகின்றன. எனவே செக்கந்தியும் பெண்ணாக இருக்கக்கூடும்.
‘பெரும்பொகை’ (பெரும்பொகய்) என்ற ஊர் அதே பெயரில் நெகனூர்ப் பட்டியிலிருந்து 3 கி.மீ. தெற்காக அமைந்துள்ளது ‘பெரும்பொகய்’ என்பதற்கு பெரிய குகை உள்ள ஊர் எனப் பொருள் கொள்ளலாம். இங்கும் சமணப்படுக்கைகள் உள்ள குகை உள்ளது.
இக்கல்வெட்டு தமிழ் - பிராமி எழுத்து வளர்ச்சிநிலையை எடுத்தியம்பும் ஒரு சிறந்த கல்வெட்டாகும். கல்வெட்டில் மெய்யெழுத்துக்கள் யாவும் புள்ளியுடன் காணப்படுகின்றன. அனைத்து எழுத்துகளிலும் தலைக்கட்டு காணப்படுகிறது. இகர உயிர்க்குறி வளைத்து இடப்பக்கமாகச் செல்கிறது. ‘ப’ எழுத்தின் இரண்டு மேல் விளிம்புகளும் சமமாக உள்ளன. ‘ள’ எழுத்து புகழுர் தமிழ் - பிராமிக் கல்வெட்டை ஒத்துள்ளது.( முனைவர் இராசவேலு)
காமயக்கவுண்டன்பட்டி பாறைஓவியங்கள்
தேனி மாவட்டம், உத்தமபாளையத்திற்கு அருகிலுள்ள காமயக் கவுண்டன்பட்டிப் பாறை ஓவியங்களைப் பார்க்க திரு. காந்திராஜன், தமிழகன் ஐயாவுடன் போயிருந்தோம். ஊருக்கு வெளியே சங்கிலிக்கரடு என்னும் மலைக்குக் கீழே சங்கிலிக்கருப்பர் கோயில் உள்ளது. அக்கோயிலிருந்து பார்த்தால் மலையின் மீது புடவு ஒன்றுத் தெரிகிறது.
வழிமாறி சுற்றித்திரிந்து ஒருவழியாக அப்புடவிற்குப் போய்ச் சேர்ந்தபோது மாலையாகிவிட்டிருந்தது. மேலும் மலை உச்சியில் தேன்கூடுகளும் அச்சுருத்திக் கொண்டிருந்தன, எனவே கேமராவில் பிளாஸ் பயன்படுத்த முடியாத நிலை, சத்தமில்லாமல் சில படங்களை மட்டும் எடுத்துக் கொண்டு விரைவாக இறங்க ஆரம்பித்துவிட்டோம். நண்பர்களே! இத்தகைய இடங்களுக்குப் போகும்போது காட்டு விலங்குகள் மற்றும் தேனீக்களின் அச்சுருத்தலுக்குத் தக்கவாறு தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாமல் செல்ல வேண்டாம். தேன்கூடு கலைந்தால் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். மனித உருவங்கள், விலங்குகள், படகின்மீது நிற்கும் மனிதன், விலங்கின் மீது உட்கார்ந்த நிலையில் மனிதன், உட்பட பல ஓவியங்கள் வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ளன. - பாலா பாரதி
அருகவேலிப் பாறைஓவியங்கள்
அருகவேலியில் உள்ள சித்திரக்கல் பொடவு என்னும் குகைப்பகுதிக்கு திரு காந்திராஜன், முனைவர் தமிழகன் ஆகியோருடன் அங்குள்ள பாறைஓவியங்களைப் பார்க்கப் போயிருந்தோம். கடினமானப் பயணமாக இருந்தது.
(Rockart at Arugaveli, Theni Dist. Tamilnadu)
கோவனூர் பாறைஓவியங்கள்
கோவனூர் பாறைஓவியங்களைப் பார்க்க திரு காந்திராஜன் அவர்களிடம் அலைபேசியில் வழியைக் கேட்டுக்கொண்டே, ஏதோ நம்பிக்கையில்தனியாகப் போயிருந்தேன். கோவை பெரியநாயக்கன் பாளையத்திலிருந்து கோவனூர் சென்று அங்கிருந்து பாலமலையில் ஏற வேண்டும். பயந்தது போலவே வழிமாறி காட்டுக்குள் சுற்றித்திரிந்து ஒருவழியாக பூங்கோலம்மன் கோயிலைக் கண்டுபிடித்தோம். அது பெரிய கோயிலாக இல்லாமல் சிறிய வழிபாட்டுத்தளமாக இருந்தும் அங்கே செல்லப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டும் இருந்தன. நம்மை அவ்வூர்காரர்கள் அவ்விடத்திற்கு அழைத்துச்சென்றார்கள்.
வேட்டையாடும் மனிதர்கள் என சுமார் 50 லிருந்து 60 உருவங்கள்வரை காணப்படுகின்றன. இவற்றில் சிறப்பானதாக வாய் திறந்தநிலையில் புலி ஒன்றும் உள்ளது.
Monday 1 January 2024
ஆலம்பாடிப் பாறைஓவியங்கள்
மான் கூட்டமொன்று புல்வெளியில் நுழைவது போன்ற ஓவியம் காணப்படுவது சிறப்பு. சிறிய மானுருவம் ஒன்று மிக அழகாக வரையப் பட்டுள்ளது. இங்கு இரண்டு அடுக்கு வண்ணப்பூச்சு முறையையும் காணமுடிகிறது, இதனால் தொன்மையான ஓவியங்களின் எஞ்சிய தடயங்கள் மீது மீண்டும் மீண்டும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதலாம்.
மேலும் இங்குப் பல்லிபோன்ற வடிவில் பெரிதாக வரையப்பட்ட ஓவியமும் முகமூடி போன்ற ஓவியமும் உள்ளன.